என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பொள்ளாச்சி பலாத்கார சம்பவம்"
- கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.
- விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை.
கோவை:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி மற்றும் பெண்களை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து துன்புறுத்தி வந்தது.
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் கடந்த 2019-ம் ஆண்டில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்த நிலையில் வழக்கானது சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து, இந்த வழக்கில் தொடர்புடையதாக திருநாவுக்கரசு(25), சபரிராஜன்(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27), மணிவண்ணன்(28), ஹெரன்பால்(29), பாபு(27), அருளானந்தம்(34), அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவர்கள் மீது 2019 மே 21-ல் கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகும், வழக்கை விசாரிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் வழக்கை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பின் 2021-ம் ஆண்டு நவம்பர் 11-ல் 9 பேர் மீதும் கூட்டு பாலியல் பலாத்காரம், பெண்கள் கடத்தல், கூட்டுச்சதி, மானபங்கம் செய்தல், வன்கொடுமை, ஆபாச வீடியோவை பரப்புதல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி குற்றம் புரிதல் உள்பட 10 சட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகியும் சாட்சி விசாரணை தொடங்கப்படாமல் இருந்தது.
இந்த நிலையில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்ட தனி அறையில், மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் சாட்சி விசாரணை தொடங்கியது.
அறையின் கதவுகள் மூடப்பட்டு, இன்கேமரா முறையில் ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. இந்த விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர்கள் கோர்ட்டிற்கு அழைத்து வரப்படவில்லை. அவர்கள் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதேபோன்று பாதிக்கப்பட்டவர்களும் அழைத்து வரப்படாமல் ரகசிய இடத்தில் இருந்தவாறு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக சாட்சியம் அளித்தனர்.
பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு சாட்சி விசாரணை தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும்.
- தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
சென்னை:
கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.-க்கு மாற்றி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
அந்த அரசாணையில், பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் புகார் அளித்த சகோதரரின் பெயர்களை வெளியிட்டதால், பாதிக்கப்பட்ட மற்ற பெண்கள் புகார் அளிக்க முடியாமல் இன்னலுக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகக் கூறி, சென்னையை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அதில், பாதிக்கப்பட்ட பெண்களின் பெயர்களை வெளியிட்ட அப்போதைய போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும், அரசாணையில் பெயர்களை இடம்பெறச் செய்தது குறித்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும், அப்போதைய தலைமை செயலாளரிடமும் விசாரணை நடத்த வேண்டுமெனவும் கடந்த ஆண்டு ஜனவரி 12-ந் தேதி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் மனு அளித்து, அந்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்களின் பெயரை வெளியிட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாக தமிழ்நாடு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளாமல் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறி, வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பொள்ளாச்சியில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமான மாணவியை, ஒரு கும்பல் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் திருநாவுக்கரசு(26), என்ஜினீயர் சபரிராஜன்(25), ஜவுளிக்கடை உரிமையாளர் சதிஷ் (29), வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், புகார் கொடுத்த மாணவியின் அண்ணனை தாக்கி மிரட்டியதாக பார் நாகராஜ், பாபு, செந்தில், ஆச்சிப்பட்டியை சேர்ந்த வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பலின் பின்னணியில் மேலும் சிலர் இருப்பதாகவும், அவர்களை தப்ப வைக்க போலீசார் முயற்சி செய்வதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், சமூகஆர்வலர்கள், வக்கீல்கள் குற்றம் சாட்டினர். எனவே இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்ற வேண்டும், பெண் அதிகாரியை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் இவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நிஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் நேற்று கோவை வந்தனர். அவர்களிடம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பொள்ளாச்சி போலீசார் ஒப்படைத்தனர். உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
சி.பி.சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர் இன்று காலை கோவை வந்தார். அவரும் பொள்ளாச்சிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
கைதான கும்பல் கடந்த 7 வருடங்களாக 100-க்கும் மேற்பட்ட பெண்களை சீரழித்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கும்பலிடம் கல்லூரி மாணவிகள் தவிர சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர், கோவையை சேர்ந்த கல்லூரி பேராசிரியை, டாக்டர் ஒருவரின் மனைவி என பலரும் சிக்கி உள்ளனர்.
அவர்களை அடையாளம் கண்டு, தேவையான பாதுகாப்பு கொடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் தங்களிடம் சிக்கிய வசதியான பெண்களிடம் இந்த கும்பல் பணம், நகை பறித்து மோசடி செய்துள்ளனர். கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.5 கோடி வரை பெண்களிடம் இருந்து மோசடி செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் முறையாக புகார் பெறுவதற்கும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த கும்பலின் பின்னணியில் மொத்தம் 20 பேர் வரை இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரிக்க, திருநாவுக்கரசு உள்பட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக கோர்ட்டு அனுமதி பெறுவதற்காக ஓரிரு நாட்களில் போலீசார் மனுதாக்கல் செய்ய உள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ.-க்கு மாற்ற தமிழக அரசு நேற்று பரிந்துரை செய்தது. இது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்புகிறது. அதை மத்திய அரசு ஏற்றவுடன் சி.பி.ஐ. விசாரணை தொடங்குவார்கள்.
அதுவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். #PollachiAbuseCase #PollachiCase #CBCID
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்